சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என, சொல்லப்பட்டு வந்த
குருநாத் மெய்யப்பன் சூதாட்டக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும்
நிலை உருவானபோது, அவர் அணியின் உரிமையாளர் அல்ல என்றும், வெறும் கௌரவ
உறுப்பினர் மட்டுமே என இந்தியா சிமென்ட்ஸ் விளக்கம் அளித்தது. அதைத்
தொடர்ந்து, இவ்விவகாரத்தில் நடந்து வரும் விசாரணையில், மற்ற சில அணி
வீரர்களுக்கும் தொடர்பு இருக்கும் என தகவல் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மற்ற அணிகளின் உரிமையாளர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
ஐபிஎல் அணிகளில், அதிகமான எண்ணிக்கை பங்குதாரர்களைக் கொண்ட அணி என
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. ட்ரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் என்ற
நிறுவனம்தான் இதன் அதிகாரப் பூர்வ உரிமையாளர். இந்த அணிக்கு 7 பங்குதாரர்
இதில் உள்ளனர். இதில் நன்கு அறியப்பட்ட பங்குதாரர், பாலிவுட் நடிகை
ப்ரீத்தி ஜிந்தா. அடுத்து, பாம்பே டையிங் குழுமத்தைச் சேர்ந்த நெஸ் வாடியா
மற்றும் கால்வே இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம். இந்த 3 தரப்புக்கும் தலா
22.98 சதவீத பங்குகள் உள்ளன.
அடுத்து, எம்பி ஃபின்மார்ட் என்ற நிறுவனத்துக்கும், விண்டி
இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்துக்கும் தலா 11.49 சதவீத பங்குகள்
தரப்பட்டுள்ளன. ரூட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம், 4.09 சதவீத
பங்குகளும், ஹோட்டல் துறையில் செயல்பட்டு வரும் ஏபிஜி சுரேந்திரா குழுமத்
தலைவரான கரன் பால் 3.99 சதவீத பங்குகளும் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்த அணியின் உரிமையாளர், நைட் ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம்.
முன்னணி பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தனது ரெட் சில்லீஸ்
என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் இதில் 54.77 சதவீத பங்குகளை
பெற்றுள்ளார்.
அதே போல, பிரபல நடிகையான ஜூஹி சாவ்லா 20.10 சதவீத பங்குகளை
வைத்துள்ளார். இதுதவிர, மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி ஸீ ஐலேண்ட்
இன்வெஸ்மெண்ட் என்ற நிறுவனத்தின் ஜே மேத்தா என்பவருக்கு 25.12 சதவீத
பங்குகள் உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ்
ஜெய்ப்பூர் ஐபிஎல் கிரிக்கெட் என்ற நிறுவனம். இந்த நிறுவனத்தின் மொத்த
பங்குகளையும், மொரிஷியஸ் நாட்டைச் சேர்ந்த இ.எம். ஸ்போர்டிங் ஹோல்டிங்ஸ்
என்ற நிறுவனம் வைத்துள்ளது. அதில் நான்கு பேர் பங்குதாரர்கள். இதில் சுரேஷ்
செல்லாராம் 44.1 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இவர், முன்னாள் ஐபிஎல்
கமிஷனரான லலித் மோடியின் உறவினர் எனவும் சொல்லப்படுகிறது.
அடுத்து எமர்ஜிங் மீடியா என்ற நிறுவனப் பெயரில், 32.4 சதவீத பங்குகளை
மனோஜ் பாதல் என்ற நபர் வைத்துள்ளார். பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின்
கணவர் ராஜ் குந்த்ரா, குக்கி இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனம் மூலமாக 11.75
சதவீத பங்குகளை பெற்றுள்ளார். அதேபோல், ப்ளு வாட்டர் எஸ்டேட் என்ற நிறுவனம்
மூலமாக, சர்வதேச மீடியா உலகில் அறியப்பட்ட லாச்லன் மூர்டெக் 11.75 சதவீத
பங்குகளைப் பெற்றுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ்
இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம். எனினும்,
இந்த குழுமத்தின் 3 நிறுவனங்களின் பெயரில் இந்த பங்குகள் உள்ளதாக
தெரிகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்துக்கு
49.99 சதவீதமும், ஷினானோ இன்டஸ்ட்ரியல் ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும்,
டீஸ்டா ரிடெய்ல் என்ற நிறுவனத்துக்கும் தலா 20 சதவீதமும் பங்குகள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மீதியுள்ள 10 சதவீத பங்குகள்
இக்குழுமத்தைச் சேர்ந்த அன்ஷூ ஜெயின் என்பவரது பெயரில் உள்ளது என்கின்றன
தகவல்கள்.
ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ்
ஹைதராபாத் சன் ரெய்சர்ஸ் அணியின் உரிமையாளர், சன் டிவி நெட்வொர்க். இதன் மொத்த பங்குகளும் இந்த குழுமத்திடமே உள்ளன.
ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களுரு
அணியின் உரிமையாளர் யூபி ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட். இதன் பங்குகள் அனைத்தும், விஜய் மல்லையா தலைமையிலான யூ பி குழுத்திடம் உள்ளன.
டெல்லி டேர்டெவில்ஸ்
இந்த அணியின் உரிமையாளர், ஜிஎம்ஆர் ஸ்போர்ட்ஸ். டெல்லி விமான நிலையத்தை
கட்டி நிர்வகிக்கும் ஜிஎம் ஆர் குழுமத்திடம் இதன் மொத்த பங்குகளும் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்த அணியின் உரிமையாளர் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். இதன் பங்குகள் அனைத்தும் இந்த நிறுவனத்திட்மே உள்ளது.
பூனே வாரியர்ஸ் அணி
அடுத்த ஐபிஎல் போட்டியில் இருந்து விலகியுள்ள, பூனே வாரியர்ஸ் அணி. இதன்
உரிமையாளர், சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்டஸ் என்ற நிறுவனம். இதன் பங்குகள்
அனைத்தும் சஹாரா இந்தியா குழுத்திட்ம் உள்ளன.