வறுமைக்கும், பயங்கரவாதத்துக்கும் இடையே தவிக்கும் சோமாலியாவை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
இங்கு மரங்கள் எதிலும் பச்சை இலைகளைப்
பார்க்க முடியாத நிலை உள்ளது. தெருவோரங்களிலும் பாலைவன மணலிலும்
எழுந்திருக்கக்கூடத் திராணியற்று ஊர்ந்தபடி செல்கின்றனர் குழந்தைகள்.
எல்லாக் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு
தொலை தூரத்தில் உள்ள முகாம்களுக்கு நடக்க முடியாது என்பதால் சில
குழந்தைகளைப் பெற்றோர்களை சாகவிட்டுவிடுகிறார்கள்.
ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு,
இறந்துபோன இன்னொரு குழந்தையைக் குழியில் போட்டுப் புதைக்கும் நிலை
இங்குள்ள தாய்மார்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது.
சோமாலியாவில் நரகம் போன்ற அதிர்ச்சியான
நிலை உள்ளது. இந்த நாடு ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கிறது. பசியும்
பஞ்சத்தினால் உடல் சிறுத்து, தலை வீங்கிப்போன மனிதர்களும் உள்ளனர். கூடவே
இங்கு மத அடிப்படைவாதமும் நிலவுகிறது.
நாட்டின் தெற்குப்பகுதிகள் பெரும்பாலும்
ஆயுதக் குழுக்களின் பிடியில் இருக்கின்றன. இவர்களது கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளில் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. திருடினால் கையை
வெட்டுவார்கள். கலப்படம் செய்தால் கல்லால் அடிப்பார்கள். போதைப் பொருள்
கடத்தினால் தூக்கிலிடுவார்கள். உணவுக்கே வழியில்லாத மக்களின் நிலைமை,
இவைபோன்ற கடுமையான சட்டங்களாலும் சண்டைகளாலும் மேலும் மோசமடைந்திருக்கிறது.
நாட்டில் மழையில்லை, இயற்கை வளங்கள்
இல்லை என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முறையான அரசு நிர்வாகம் இல்லை
என்பதுதான் இங்குள்ள பஞ்சத்துக்கு அடிப்படைக் காரணம்.
சோமாலியாவில் அரசை அமைப்பதற்கு
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் பல முறை முயன்று
தோற்றுப் போயிருக்கின்றன. கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு அதிபரும்
நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், இன்னும்
அரசற்ற நாடாகவே சோமாலியா இருந்து வருகிறது.
புதிய தலைமுறை இணையத்தில் இருந்து பெறப்பட்டது